'பாபா' படத்தை இப்போது வெளியிட வேண்டும் என்கிற சிந்தனை ரஜினிக்கு வருவதற்கு காரணம் 'காந்தாரா' திரைப்படம்தான்..இந்த இரு படத்திலும் இழையோடும் அடிப்படை ஒன்றுதான்..
இந்த இரு படத்திலும் ஒரு தெய்வ அணுக்கிரகம் பெற்ற குழந்தை,தர்மத்தின் பாதையை விட்டு விலகி எதிர் திசையில் பயணிக்கிறது.
விதிக்கப்பட்டபடி தன் மகன் ஆன்மீக பாதைக்கு திரும்பினால் தன்னை விட்டு விலகிப் போய்விடுவான் என்கிற அச்சமும்,அதே நேரம் தற்கால வாழ்வில் அவனுடைய நடத்தையின் மீதான வருத்தமும் ஒரு சேர துன்புறுத்தும் தாய் இரு கதையிலும் உள்ளார்..
பாபா' படம் வெளிப்படையான அதே சமயம் ஆழமான அரசியல் திரைப்படம்.அது இந்த தமிழ் நிலத்தில் புரையோடிப் போன அரசியலை நேரடியாக மக்களின் முன்னால் விரித்துப் பேசியது..
நாத்திகவாதியாக சுற்றித்திரியும் பாபா என்கிற இளைஞன் தன்னுணர்வு பெற்று தன் பிறப்பின் ரகசியம் அறிந்து மெல்ல மெல்ல முழு ஆன்மீகவாதியாக மாறுவதோடு நில்லாமல்,இந்த மக்களுக்கும் அதன் பயனைத் தரவேண்டும் என்று நினைக்கிறான்.அதற்கு அவன் தீர்வாக யோசிப்பது,தர்மத்தை ரட்சிக்கும் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்று..
'காந்தாரா' வெளிப்படையான அரசியல் படமல்ல;ஆனால் அது தீவிர அரசியலை கதைக்குள் வைத்துள்ளது.ஒரு அரசாங்கம் மக்களை எப்படி பாதுகாக்க வேண்டுமென பஞ்சுருளி தெய்வம் முடிவு செய்கிறது.தன் மக்களுக்கான காப்பான் யார் என்பதை அந்த சக்தி சிந்தித்து தேர்வு செய்கிறது.இதையேதான் பாபா வேறு தளத்தில் சொல்கிறது..
தன்னுடைய அசட்டுத்தனமான சுதந்திர வாழ்வில் இருந்து காடுபட்டி சிவா வெளியே வந்து தன்னுணர்வு பெறுவது குருவாவின் மரணத்தினால்தான்.பாபாவும் தன் மாமா இறப்பிலிருந்தே தன் பிறப்பின் ஆதி நோக்கத்தை அடைகிறான்..
காடுபட்டி சிவன்,பாபா இருவரையுமே ஆளும் வர்க்கம் தன்னுணர்வு பெற்றவனாக மாறுவதை வெறுப்புடன் அணுகுகிறது..தெய்வத்திற்கும் மக்களுக்குமான தொடர்பை வெட்டியெறிய வேண்டும்.நன்மை விளைவிக்கும் சக்திகளின் குரலை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள அருள்நிறை மனிதர்களை வீழ்த்த வேண்டும் என்றே அதிகாரவர்க்கம் நினைக்கிறது..
காடுபட்டி சிவனை பண்ணையாரும்,பாபாவை முதல்வரும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி அழிக்கவே நினைக்கிறார்கள்.இதில் இருவரும் தன் மக்களை எப்படி காக்கிறார்கள் தெய்வ அருளுடன் என்பதுதான் கதை..
காந்தாராவின் திரைக்கதை மற்றும் குறிப்பாக அதன் இறுதிக்காட்சிகள் வேறொரு நிலைக்கு நம்மை கொண்டு போனது.பாபாவில் அது நிகழாமல் போய்விட்டது..திரைக்கதை தீவிர குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஆனால் பாபா படத்தின் அரசியல் செய்தி தமிழக களத்திற்கு என்றும் பொருந்தக் கூடியது..
தனக்கு கிடைத்த வரங்களை அலட்சியமாக பயன்படுத்தும் பாபாவை,காளிகாம்பாள் கோவில் புதுப்பொலிவு பெற்று இந்த சாலையே மேம்பட வேண்டும் அதில்தான் என் பிணம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று மாமா ஆணையிடுகிறார்.இது அப்படியே நடக்கிறது..
"ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்" என்றொரு பாடல் வரும் இதில்..அதில் சில வரிகள் மிக முக்கியமானது..👇
|| கடவுளை மறுத்து
இவன் நாள் தோறும்
கூறினானே நாத்தீகம்
பகுத்தறிவாளனின்
நெஞ்சினிலே பூத்த
தென்ன ஆத்திகம்
திருமகன் வருகிற
திருநீறை நெற்றி மீது
தினம் பூசி
அதிசயம் அதிசயம்
பெரியார் தான்
ஆனதென்ன ராஜாஜி ||
இதை வாலி எழுதியதால் அன்று தி.கழகத்தால் கடும் கண்டனத்திற்கு ஆளானார்.
இந்த வரிகள் சொல்கிறபடி பாபாவின் நல்லரசியலானது 'நாத்திக - பெரியாரிய' வாதத்திற்கு எதிரானது என்பதால்,அது ராஜாஜியின் ஆத்திக அரசியல் என்று குறியீடாக எழுகிறது வாலியின் பார்வையில்..
பாபா தமிழகத்தின் மக்களுக்கு சிறந்ததொரு காப்பானாக கந்தன் என்கிற அப்பழுக்கற்ற பழம்பெரும் அரசியல்வாதியை வெற்றி பெற வைக்கிறான்.ஆனால் சூழ்ச்சிகள் அவனுடைய தேர்வையும்,வாழ்வையும் எப்படி சூறையாடுகின்றன என்று காட்சிகள் விரிகிறது..
ஆதரவற்ற தன் மக்களை பண்ணையாரின் வெறித்தனம் பலிகொள்கிறது என்கிற போது,அங்கே வீறுகொண்டு எழும் ஷேத்திரபாலா காடுபட்டி சிவன் மீது வந்து எதிரிகளை வதம் செய்கிறது..
கையறுநிலையில் நிற்கும் தன் மக்களுக்கு அன்பே வடிவான நல்லவன் மட்டும் போதாது,ஒரு வல்லவனும் வேண்டும் என்று இமயத்தை புறந்தள்ளி மக்களை நோக்கி நடைபோடுகிறான் பாபா..
காந்தாரா படத்தில் எதிரிகளை அழித்து தன் மக்களுக்கு உண்மையான காப்பானை அறிமுகப்படுத்துகிறது ஷேத்திரபாலா..ஆனால் பாபா அந்த நெகிழ்வை இறுதிக் காட்சிகளில் தரவில்லை.இதுதான் அந்தப் படத்தில் வருகிற சலிப்பாக,குழப்பமாக அமைந்தது..
ஆனால் பாபா படத்தை பொறுத்த வரை,திராவிட நாத்திக அரசை ஒழிக்க ஒரு வல்லவனை காப்பானாக கொண்டு வர வேண்டும்.அது தெய்வீக சக்தியால் நடக்கும் என்று வலுவாக சொன்ன திரைப்படம்...
Post a Comment