போரதோட்டை கடற்கரையில் ஆட்டோவிற்குள் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரியின் சடலம் கண்டெடுப்பு: தீவிர விசாரணை ஆரம்பம்
நீர்கொழும்பு, ஜூன் 14 – நீர்கொழும்பு போரதோட்டை (கம்மல் தொட்டை) கடற்கரையிலுள்ள ஒரு முச்சக்கர வண்டிக்குள், இன்று (14) காலை எரிந்த நிலையில் ஒரு பொலிஸ் அதிகாரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர், நீர்கொழும்பு வலய குற்றப்புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஜயந்த புஷ்பகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இவர், நீர்கொழும்பு தலுபத பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதலாவதாக அப்பகுதி மக்கள் இன்று காலைவே பார்த்து, உடனடியாக கொச்சிக்கடை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். தகவலை அடுத்து, கொச்சிக்கடை பொலிஸாரும், நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகமும் இணைந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
சம்பவம் தொடர்பான தெளிவான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. இது தற்கொலையா, அல்லது குற்றம் சார்ந்தது எனும் கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், நீதவான் விசாரணைக்குப் பிறகு சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடருகின்றன.
Post a Comment